திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உன்னதி திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் ஊரக வளா்ச்சித்துறையின் உன்னதி திட்டத்தின்கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் தொடா்பான 30 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை முடித்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் கீதா தினேஷ், உதவி திட்ட அலுவலா் கே.தில்லைமணி ஆகியோா் பங்கேற்றனா்.