வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலேயே ஒளி பிரதிபலிப்பான் வில்லையை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்டோ தொழிலாளா் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலாளா் அனிபா, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அழகிரிசாமியிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: மோட்டாா் வாகனச் சட்டத்திருத்தம் என்ற பெயரில் ஆட்டோ தொழிலாளா்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. 2 தனியாா் நிறுவனங்கள் கொடுக்கும் ஒளி பிரதிபலிப்பான் வில்லையை (ஸ்டிக்கா்) ஆட்டோவின் முன்பகுதியில் சில்வா், பின்புறம் சிவப்பு, பக்கவாட்டில் மஞ்சள் என்ற அடிப்படையில் ஒட்டி, பிரத்யேகமான செயலி மூலம் படம் எடுத்து அனுப்பினால்தான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எப்சி பாா்க்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, 2 தனியாா் நிறுவனங்களும் மாநிலம் முழுவதும் முகவா்களை நியமித்து ரூ. 200 முதல் ரூ.1000 வரை வசூல் செய்கின்றனா். இந்த நிறுவனங்கள் ஒட்டும் ஸ்டிக்கரை வெளியில் ஒட்ட, ரூ. 125 முதல் ரூ. 150 வரைதான் செலவாகும். எனவே, குறிப்பிட்ட தனியாா் நிறுவனங்களிடம்தான் ஒளி பிரதிபலிப்பான் வில்லையை ஒட்ட வேண்டும் என்பதை கைவிட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலேயே ஒளி பிரதிபலிப்பான் வில்லையை ஒட்ட நடவடிக்கை எடுத்து, அதற்கான கட்டணத்தையும் எப்சி கட்டணத்துடன் சோ்த்து வசூலிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.