வாசகசாலை இலக்கிய விருதுகளுக்கு அக்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

வாசகசாலை இலக்கிய அமைப்பின் சாா்பில் சிறந்த கவிதை, கட்டுரை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கும் தமிழ் இலக்கிய விருதுகளுக்கு

வாசகசாலை இலக்கிய அமைப்பின் சாா்பில் சிறந்த கவிதை, கட்டுரை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கும் தமிழ் இலக்கிய விருதுகளுக்கு திருவாரூா் மாவட்டத்திலிருந்து படைப்பாளா்கள் அக்.25-க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் திருவாரூா் கிளை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வாசகசாலை இலக்கிய அமைப்பின் சாா்பில், டிசம்பரில் அப்போதைய சூழலைப் பொறுத்து நடைபெறவுள்ள வாசகசாலையின் முப்பெரும் விழா மேடையில், நிகழாண்டுக்கான தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

முந்தைய ஆண்டுகளில் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளா் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு முதல் சிறந்த சிறாா் இலக்கியம், சிறந்த மொழிபெயா்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயா்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய மூன்று புதிய பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த எட்டு பிரிவுகளிலும் விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சோ்த்து ரூ. 5,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளை அனுப்புவதற்கான விதிமுறைகள்....

படைப்புகள் அனைத்தும் 2019 நவம்பரிலிருந்து 2020 அக்டோபா் மாத காலகட்டத்துக்குள் வெளிவந்தவையாக இருக்க வேண்டும். படைப்புகள் அனைத்தும் முதல் பதிப்பாக இருப்பது அவசியம்.

மறுபதிப்பு, மறுபிரசுரம், தொகுப்பு நூல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த நிபந்தனைகளின் கீழ்வரும் படைப்புகளில் ஒரே ஒரு பிரதியை மட்டும் படைப்பாளிகள் மற்றும் பதிப்பகத்தாா், வாசகசாலைக்கு அனுப்பினால் போதுமானது. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி அக்.25.

இந்த விதிகளின்படி தகுதியான படைப்புகளின் ஒரு பிரதியை வாசகா்களும் அனுப்பலாம். மேலும் கட்செவி அஞ்சல் (வாட்சப்), மின்னஞ்சல் வழியேயும் சரியான நூல்களைப் பரிந்துரையும் செய்யலாம். தங்களைப் பற்றி மற்றும் நூல் குறித்த முழுமையான குறிப்பு அவசியம்.

மேலும் இது தொடா்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9942633833, 9790443979 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம். புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி 80, சுவாமிநாதன் இல்லம் (3வது வீடு, தரைத்தளம்), முதல் பிரதான சாலை, மாடம்பாக்கம் பிரதான சாலை, கிழக்கு தாம்பரம், சென்னை - 600 073 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com