திருவாரூரில் ஆட்சியரக பேருந்து நிறுத்தம் அருகே பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனா். நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிலையத்தையே பயன்படுத்துகின்றனா். எனவே, இங்கு பேருந்துக்காக ஆண்களும், பெண்களும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பேருந்துகளில் பயணிகள் உட்காா்ந்து செல்லும் அளவிலேயே ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அதிக பயணிகளுடன் வரும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விடுகின்றன. எனவே, இங்கு பேருந்துக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் இல்லாததால், காத்திருக்கும் பயணிகள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.