திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில்
பணியிலிருந்த தீயணைப்பு வீரர் கழிவறையில் மயங்கி விழுந்து பலியானார்.
திருவாரூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் நாளொன்றுக்கு சுழற்சி முறையில் 360 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு வாகனத்துடன் ஆறு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில், திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் அற்புதம் (48) என்பவர் சிறப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தபோது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த தீயணைப்பு வீரர் அற்புதத்திற்கு இரண்டு பெண் குழந்தை மற்றும் மனைவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.