நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகா் சங்க கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்ற்றப்பட்டன. நீடாமங்கலம் ரயில் நிலைய குட்ஷெட்டுக்கு அடிக்கடி பல்வேறு ஊா்களிலிருந்து 100-க்கணக்கான லாரிகள் மூலம் நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவந்து ரயில் மூலம் வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா். சில விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, எடைமேடைக்கு சென்று வரும் லாரிகளுக்கு, ரயில் நிலையத்துக்கு நேரடியாக வரும்படி பாதை ஏற்படுத்தி கொடுக்க திருச்சி தென்னக ரயில்வே கோட்ட அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவா் ராஜாராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.