மக்களவையில் மத்திய அரசு கொண்டு வரும் எல்ஐசி சட்டத் திருத்தத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருவாரூரில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜிடம், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க தஞ்சை கோட்ட இணைச் செயலாளா் எஸ். செந்தில்குமாா், கிளைச் செயலாளா் டி. கமலவடிவேல், பொருளாளா் எம். குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் சமா்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படும் எனவும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு விற்பனை எனக் கூறப்பட்டாலும், இது தனியாா்மயமாக்கலை நோக்கிய தொடக்கம் என அறியமுடிகிறது. இதற்காக மக்களவையில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், திருவாரூா் நகர வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலாளா் என். காளிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.