கூத்தாநல்லூர் : மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூர் : மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டம்
கூத்தாநல்லூர் : மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 6 முதல் 14 வயது வரையிலானவர்கள் பனங்காட்டாங்குடி,14 வயதுக்கு மேற் பட்டவர்கள் குடிதாங்கிச்சேரி என இரண்டு பிரிவுகளாக இப்பள்ளி செயல்படுகிறது.

மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சி பள்ளி கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி, 6 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், மரக்கடை கீழ்த் தெருவில் வாடகைக் கட்டடத்தில் இயங்கியது. அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு புருனே தொழிலதிபர் டி.எம். பதுருதீன், சமூக ஆர்வலர் டி.ஏ.நிஜாமுதீன் ஆகியோரின் நிதியுதவி மற்றும் தமிழக அரசின் மான்ய உதவியுடன் மேலப்பனங்காட்டாங்குடி, தமிழர் தெருவில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் பா.சந்திரசேகரால் இப்பள்ளி திறந்து வைக்கப்பட்டன.

தற்போது, இப்பள்ளி மாநில மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் அங்கீகாரத்துடன் மன வளர்ச்சிக் குன்றிய  75 மாற்றுத்திறன் குழந்தைகள் தங்கியுள்ள பள்ளியாக இப்பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி, தங்கும் வசதி, உடைகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசச் சேவையாகவே வழங்கி வருகிறது. இங்குள்ள குழந்தைகளுக்கு, கல்வியுடன், கூடைப் பின்னுதல், சாக்பிஸ், மெழுகுவர்த்தி, சாம்பிராணி போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றன. 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவக் குழுவினர்கள் நேரில் பார்வையிட்டு, மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர், பயிற்சியாளர்கள் மற்றும் மன வளர்ச்சிக் குன்றிய அனைத்து மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டு விட்டது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருவாரூர், விளமல் லயன்ஸ் சங்கம் சார்பில், 4 ஆம் ஆண்டாக ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் குமார் வழங்கிய ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள், மத்தாப்பூ கள் மற்றும் மளிகைப் பொருட்களை, அண்மையில் மாவட்ட ஆட்சியர் பா.காயத்ரி கிருஷ்ணனால் வழங்கப்பட்டன.மன வளர்ச்சிக் குன்றிய
இப்பள்ளியை , நிறுவனர் ப.முருகையன், அவரது மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியையுமான மகேஸ்வரி முருகையன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

நிறுவனர் முருகையன் ஏற்பாட்டின்படி, 
இப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் சுதந்திர தினம், தேசத் தலைவர்கள் பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களையும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் மனம் நோகாதபடி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், மனோலயம் தொண்டு நிறுவனம் சார்பில்,  கஜா புயலில் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, பால், உடைகள், போர்வைகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. தொண்டுள்ளம் கொண்ட மனோலயம் தொண்டு நிறுவனம் சார்பில், தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

மன வளர்ச்சிக் குன்றிய மாணவர்கள் இன்று விடியற்காலை, குளித்து, புத்தாடை அணிந்து, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பிரார்த்தனை செய்தனர்.தொடர்ந்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் உண்டனர். அதைத் தொடர்ந்து, மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்து, தீபாவளியைக் கொண்டாடினர்.ஏற்பாடுகளை, பயிற்சியாளர்கள் அனுராதா, செளமியா கனிமொழி, மேலாளர் சுரேஷ், கணினி ஆப்ரேட்டர் வினோத் மற்றும் ராஜா உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com