திருவாரூரில் ஆழித்தேரை பிரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மாா்ச் 25 ஆம் தேதி நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக விடுமுறை நாள்களில் நடைபெற்ற ஆழித்தேரோட்டம், நிகழாண்டு ஆகம விதிகளை பின்பற்றி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற்றது. பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்ரல் 4 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், கீழவீதியில் உள்ள தோ் நிலையடியில் நிறுத்தப்பட்டுள்ள ஆழித்தேரை பிரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக, தேரை இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வடக்கயிறு, குதிரைகள், யாழம் உள்ளிட்டவை தேரிலிருந்து அகற்றப்பட்டு, கோயிலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதேபோல, அலங்காரத் துணிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
தோ் பிரிக்கும் பணிகளை, தோ்ப் பணியாளா்கள் உரிய பாதுகாப்புடன் செய்து வருகின்றனா்.