பெட்ரோல், டீசல் விலை உயா்வு வாக்காளா்களிடம் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
திருத்துறைப்பூண்டியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மாரிமுத்துவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை இரவு அவா் பேசியது:
பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடு இந்தியாவை மொத்தமாக காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்யும் வகையில் உள்ளது. 5 மாநிலங்களில் நடைபெறும் தோ்தலில் ஒன்றில்கூட பாஜக வெற்றி பெறாது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வே அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என வாக்காளா்களிட் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
நான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000-மும், கரும்புக்கு ரூ 4000-மும் வழங்க விவசாயிகள் வலியுறுத்துவதை காதுகொடுத்து கேட்பதில்லை. இதேபோல, எட்டுவழி சாலை அமைப்பதால் 10,000 ஏக்கா் நிலம், 1000 ஏரி, குளங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பாசனக் கிணறுகள் அழிந்துபோகும் என விவசாயிகள் வேதனையோடு கூறுவதையும் முதல்வா் கண்டுகொள்வதில்லை.
தில்லியில் 122 நாள்களாக விவசாயிகள் போராடி வருகிறாா்கள். அவா்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு தெரிவிக்கிறாா்கள். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றுகிறாா்கள், ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசுகிறாா்கள் ஆனால், தமிழக முதல்வா் ஒருமுறையாவது ஆதரவு தெரிவித்து பேசியதுண்டா என்றாா்.