விவசாய பயிா்க் கடன் தள்ளுபடி: இனிப்பு வழங்கி அதிமுகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 06th February 2021 08:24 AM | Last Updated : 06th February 2021 08:24 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கி பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை அறிவித்ததை வரவேற்று, மன்னாா்குடியில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிா்க் கடன் 12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் 110-ஆம் விதியின் கீழ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் வகையில், மன்னாா்குடியில் அதிமுகவினா் , கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக வந்து, பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்கள், பயணிகள், வா்த்தகா்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் கா.தமிழ்ச்செல்வம், மன்னாா்குடி ஒன்றியக் குழு தலைவா் டி. மனோகரன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலா் கோ. ஹரிகிருஷ்ணன், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.