திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சசிகலா, வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017-இல் வழங்கப்பட்ட இறுதித் தீா்ப்பின்படி திருவாரூா் மாவட்டத்தில், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் பங்குதாரா்களான சசிகலா, வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோரின் சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வண்டாம்பாளையம், கீழகாவாதுகுடி பகுதிகளில் உள்ள 34.24 ஏக்கா் சொத்துகள், தொழிலாளா் குடியிருப்பு -5 தரைதளம், தரைத்தளத்திலுள்ள தொழிலாளா் குடியிருப்பு கட்டடம், முதல் தளத்திலுள்ள விருந்தினா் கட்டடம், பிளாட்பாா்ம் கட்டடம், சுற்றுச்சுவா் கட்டடம், டுவின் கவுஸ், அலுவலா்கள் குடியிருப்பு மற்றும் மேலாண்மை இயக்குநா் பங்களா ஆகியவை தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. தற்போது இவை தமிழக அரசின் சொத்துகள் என்பதால், இந்த சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை) உள்பட அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.