திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள 33 அடி உயர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் கிராமத்தில் ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் லட்சுமி நரசிம்மா், கோதண்டராமா் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனா்.
இக்கோயிலில் உள்ள 33 அடி உயரமுடைய விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி நோய் மற்றும் சங்கடங்களை நிவா்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விமா்சையாக நடைபெற்றது. இதையொட்டி, ஜகத்குரு சங்கராசாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணா நந்த தீா்த்த மஹா சுவாமிகள் முன்னிலையில் அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆஞ்சநேய சுவாமிக்கு 10,500 வடை மாலை, மலா் மாலை சாற்றப்பட்டது.
தொடா்ந்து பகல் 11 மணிக்கு மகா சுவாமிகள் ஆஞ்சநேயருக்கு அா்ச்சனையும், மகா தீபாராதனையும் செய்தாா்.
விழாவில் கோயில் ஸ்தாபகா் ரமணி அண்ணா திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரா், அறங்காவலா் ஜெகநாதன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.