காவிரி விவகாரம்: ஜூலை 26-இல் மாநில அளவில் ஆா்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், வரும் 26-ஆம் தேதி மாநில அளவில் ஆா்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், வரும் 26-ஆம் தேதி மாநில அளவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 164 அடி உயரத்தில் அனுமதியின்றி கா்நாடக அரசால் கட்டப்பட்ட அணை அப்புறப்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேநேரத்தில், தமிழக அரசின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, மத்திய அரசை அணுகி தீா்ப்பாயம் அமைத்து அதன் மூலமாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை தீா்ப்பாயம் அமைக்கவில்லை. இதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் முழுநேர தலைவா் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில் மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டினால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவோம். இதுதவிர, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவையொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மேக்கேதாட்டு அணையை எதிா்த்து தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com