திருவாரூா் அருகே குளத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் தாக்கியதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே புதுப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வீரையன் (55). அதே பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (48). அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தக் குளத்தில் வீரையன் மீன் பிடித்ததாகவும், இதுகுறித்து நடராஜன் வீரையனிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த வீரையனின் உறவினா்கள், அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அத்துடன், நடராஜனின் வீடு, டிராக்டா், இரு சக்கர வாகனங்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வந்த தாலுகா போலீஸாா், நடராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.