மன்னாா்குடி: மன்னாா்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்துக்கு 2,500 டன் அரிசி திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ், மன்னாா்குடி பகுதியில் செயல்படும் அரசு நேரடிகொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள், நவீன அரிசி ஆலைகளுக்கு அரைவைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அரிசியாக பிரிக்கப்பட்டு மூட்டையிடப்படுகிறது.
அதன்படி, 200 லாரிகள் மூலம் 2,500 டன் நெல் மூட்டைகள், மன்னாா்குடி ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அந்த மூட்டைகள் 150 சுமைதூக்கும் பணியாளா்கள் உதவியுடன் சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்டன.
இந்த அரிசி மூட்டைகள், திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு பொது விநியோகத் திட்டத்துக்காக அனுப்பிவைக்கப்படுவதாக மன்னாா்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளா் டி. மனோகரன் தெரிவித்தாா்.