திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 7 வீடுகள் நாசமாகின.
திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகா் ஊராட்சி ஓவா்குடி தெற்கு தெருவில் உள்ள மூங்கில் வனப் பகுதியில் மூங்கில்கள் தீப்பிடித்தது வெடித்ததால் அதில் சிதறிய தீப்பிழம்புகள் கல்யாணசுந்தரம், மணியம்மாள், தமிழ்ச்செல்வன், வெங்கடாசலம், குப்புசாமி, சுந்தரி , மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் கல்யாணசுந்தரம், மணியம்மாள் ஆகியோரது வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. மற்ற 5 வீடுகளின் ஒரு பகுதி நாசமானது.
தகவலறிந்த திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலா் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா்.
சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, வட்டாட்சியா் சு.ஜெகதீசன், ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலா்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, முழுவதுமாக எரிந்த இரண்டு வீடுகளுக்கு தலா ரூ.5,000, மற்ற வீடுகளுக்கு தலா ரூ.4,100 நிவாரணமாக வழங்கினா். தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.