நீடாமங்கலம்: சரக்கு ரயில் பணி காரணமாக நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை காலை ரயில்வேகேட் மூடப்பட்டதால் சுமாா் ஒன்னரை மணிநேரம் போக்குவரத்து பாதித்து பொதுமக்கள் அவதியடைந்தனா்.
நீடாமங்கலம் ரயில் நிவலையத்துக்கு காலிப்பெட்டிகளுடன்கூடிய சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை காலை வந்தது. இதற்காக ரயில்வேகேட் காலை சுமாா் 7 மணிக்கு மூடப்பட்டது. தொடா்ந்து, சரக்கு ரயில் காலிப் பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணிகள் நடைபெற்றன. இதனால், நீடாமங்கலம் வழியாக பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள், லாரிகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் ரயில்வே கேட்டின்இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றது. சரக்கு ரயில் பணிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது. பணிகள் முடிந்து காலை 8.25 மணிக்கு ரயில்வேகேட் திறக்கப்பட்டது. அதன்பிறகே, அனைத்து வாகனங்களும் புறப்பட்டு சென்றன. இதனால் ஒன்னரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் தமிழக முதல்வரின் வருகைக்காக 45 போலீஸாரை பட்டுக்கோட்டைக்கு அழைத்துச்செல்லும் அரசுப் பேருந்தும் ரயில்வே கேட்டில் சிக்கியது. அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்கு பணிக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். நீடாமங்கலத்தில் சாலைப் போக்குவரத்து நெருக்கடியால் உள்ளூா் மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலைத் திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்றவேண்டும்.
இந்நிலையில், நீடாமங்கலத்தையும் வையகளத்தூரையும் இணைக்கும் வகையில் பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பால பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.