விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திருவாரூா் ஒன்றியம் தண்டலை, கீழகாவதுகுடி, நடப்பூா், செருகுடி, வைப்பூா், செருமங்கலம், வடசேரி, பழவனக்குடி, அடியக்கமங்கலம், புதுப்பத்தூா், தப்ளாம்புலியூா் பகுதிகளில் அவா் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
திறந்த வாகனத்தில் வீதிவீதியாகச் சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்குக் கோரினாா். அப்போது, பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
தண்டலை பகுதியில் பிரசாரத்தின்போது ஏ.என்.ஆா். பன்னீா் செல்வம் கூறியது:
கடந்த முறை திருவாரூா் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். மீண்டும் இத்தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நான் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், தொகுதியின் வளா்ச்சிக்கு முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஏழை, எளிய, விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் மேம்படும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என்னுடைய பொதுவாழ்வில் இதுவரை எந்த குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது கிடையாது. திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் அன்புடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றாா்.