மன்னாா்குடி காவல் கண்காணிப்பு கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், பொதுமுடக்க விதி மீறி சுற்றித்திரிந்தவா்களிடமிருந்து 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, மன்னாா்குடி டிஎஸ்பி. பி. இளஞ்செழியன் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மன்னாா்குடி, மன்னாா்குடி ஊரகம், நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூா், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம் ஆகிய 8 காவல் நிலைய சரகத்தில், பொதுமுடக்க விதிமுறைகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவா்களிடமிருந்து, திங்கள்கிழமையிலிருந்து 3 நாள்களில் மட்டும் 193 இருசக்கர வாகனம், 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.13 ரோந்து வாகனத்தில் போலீஸாா் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் 150 போலீஸாா் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேட்டின்போது, மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் உடனிருந்தாா்.