திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் மேலபூவனூா் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் கிங்ஸ் ரோட்டரி கிளப், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ரோட்டரி தலைவா் ராஜ் (எ) கருணாநிதி தலைமை வகித்தாா். இதில், கால்நடைகளுக்கு தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், கோழிகளுக்கு தடுப்பூசி மற்றும் சத்து மருந்துகள் ஆகியவை அளிக்கப்பட்டன.
சங்க உதவி ஆளுநா் ராமதுரை, வழக்குரைஞா் கலியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை ஆட்சியா் (பயிற்சி) தனலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் தனபாலன், கால்நடை மருத்துவா் ஜெயபால், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், வேளாண் வல்லுநா் ஜெகதீசன், மருத்துவா் சபாபதி ஆகியோா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.