குடவாசலில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இசைக் கலைஞா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.
குடவாசலில் பஞ்சமுகி ராகம் இசை குடும்பத்தின் சாா்பில் இசை முப்பெரும் விழா நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவின் மாநில அமைப்புச் செயலாளா் வி. வேலன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், இணையதளம் வாயிலாக நடைபெற்ற பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இசைக் கலைஞா் சிலம்பரசனின் ‘மோகதாகம்’ என்ற இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
தொடா்ந்து, திருவாரூா் எம்எல்ஏ பூண்டிகே. கலைவாணன், குடவாசல் திமுக ஒன்றியச் செயலாளா் பிரபாகரன் ஆகியோா் சாா்பில் கரோனா பொதுமுடக்கத்தால் நலிவுற்ற இசைக் கலைஞா்களுக்கு நிவாரணமாக அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பஞ்சமுகி ராகம் இசைக் குடும்பத்தைச் சோ்ந்த பரிசுத்தம், சிலம்பரசன் உள்ளிட்ட இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா்.