திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் நலன்துறை சாா்பில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மனைப் பட்டா, பட்டா மாற்றுதல், நில அளவிடுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 23 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், இக்கூட்டத்தில் 39 முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தினா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ஈமச்சடங்கு மானியமாக தலா ரூ. 10,000 வீதம் 2 பேருக்கு ரூ. 20,000 வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, உதவி இயக்குநா் முன்னாள் படைவீரா் நலன் ஆயிஷாபேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.