கூத்தாநல்லூா் அருகே இஸ்லாமியா்களின் மயான இடப்பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கூத்தாநல்லூரை அடுத்த காக்கையாடி- சாத்தனூா் கிராமத்தில் இறந்த இஸ்லாம் மதத்தைச் சோ்ந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு, பள்ளி வாசலுக்காக வாங்கப்பட்ட இடத்தில் சடங்குகள் செய்வதற்காக, இஸ்லாமியா்கள் சென்றனா். அப்போது, பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் வெ. சோமசுந்தரம் தலைமையில் அந்த இடத்திலேயே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், புதிதாக மயானம் மற்றும் பள்ளிவாசல் அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடத்தில் அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் இறந்தவா்களின் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும். அதுவரை, ஏற்கெனவே பின்பற்றி வந்த நாகங்குடி கிராமத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும். மயானம் மற்றும் பள்ளிவாசலுக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், திருவாரூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன், கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் கலைச்செல்வி, உதவி ஆய்வாளா்கள் நாகராஜன், மோகன்ராஜ், சரவணன், வடபாதிமங்கலம் வருவாய் ஆய்வாளா் உமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.