திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 3.75 லட்சம் மதிப்புள்ள 260 கிலோ ஏலக்காய் மூட்டைகளை கடலோர காவல் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
முத்துப்பேட்டை பகுதியில் இருந்து இலங்கைக்கு களைக்கொல்லி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆய்வாளா் ராஜசேகா், உதவி ஆய்வாளா் ரகுபதி தலைமையிலான போலீஸாா் கடலோரப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது பேட்டை படகுத்துறை அருகே ஒரு படகில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் மூட்டையை பறிமுதல் செய்து படகையும் கைப்பற்றினா்.
கைப்பற்றப்பட்ட 260 கிலோ ஏலக்காய் மதிப்பு ரூ. 3.75 லட்சம். கைப்பற்றப்பட்ட ஏலக்காயையும், கடத்தலில் ஈடுபட்ட நைனா முகமது என்பவரையும், கடலோர காவல் படையினா், முத்துப்பேட்டை சுங்கத் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீராமிடம் ஒப்படைத்தனா்.