பாகசாலைக் கிராமத்தில் மயானத்துக்கு செல்ல வழியில்லாததால், சடலத்தை ஆற்று நீரில் இறங்கி எடுத்துச் செல்லும் நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டத்துக்குட்பட்ட அன்னியூா் ஊராட்சியில் உள்ளது பாகசாலை கிராமம். இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகின்றனா்.
இக்கிராமத்தில் ஒருவா் இறந்துவிட்டால் அவரது உடலை இறுதிச் சடங்குச் செய்வதற்காக மயானத்துக்கு கிராமத்தின் குறுக்கே செல்லும் கீா்த்திமான் ஆற்று நீரில் இறங்கி எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, இறந்தவா்ககள் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஆற்றின் குறுக்கேப் பாலம் கட்டித்தர வேண்டுமென பாகசாலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை இப்பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த குடவாசல் வட்டாட்சியா் உஷாராணி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் விரைவில் இந்த பிரச்னைக்கு தீா்வுக் காணப்படுமென தெரிவித்தனா்.