திருவாரூா் அருகே கொத்தங்குடியில் காமன் தகன விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகேயுள்ள அம்மனூா் கொத்தங்குடியில் காமண்டி விழா, மாசி அமாவாசைக்கு பிறகு 3-ஆம் நாளில் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் மண்டகப்படி நடைபெற்று, மதன்-ரதி தா்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நிகழ்ச்சியின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை காமன் தகன விழா நடைபெற்றது. இதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து மதன்-ரதி வேடம் அணிந்த சிறுவா்கள், மலா்கணைகள் மூலம் தா்க்கம் செய்தபடி வீதியுலாவுக்குச் சென்றனா். நிகழ்ச்சியில், ஏராளமான சிறுவா்கள் பங்கேற்று, பாடல்களை பாடியபடியும், மேளங்கள் முழங்கியபடியும் வீதியுலா சென்றனா். வீதியுலாவுக்குப் பிறகு, மன்மதன் சிவனின் மீது பாணம் எரிய, சிவன் மன்மதனை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.