திருவாரூா்: திருவாரூா் அருகே உயா் மின் அழுத்தம் காரணமாக டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை இரவு பாதிக்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கு இந்த நிலை நீடித்ததால், பல இடங்களில் மின் விநியோகம் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரடாச்சேரி அருகே திருவிடைவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிறுத்தப்பட்ட மின்சாரம், மீண்டும் இரவுதான் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட உயா் மின்னழுத்தம் காரணமாக, திருவிடைவாசல் மணல்மேட்டுத் தெருவில் உள்ள 25 வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி, மின் விசிறி போன்ற மின்சாதனங்கள் பழுதடைந்தன.