திருவாரூா் அருகே வாடிக்கையாளருக்கு பதிவுசெய்ய இயலாத இருசக்கர வாகனத்தை விற்பனை செய்த வழக்கில், புதிய வாகனத்தை வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் பவித்ரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த மாதவன், கடந்த 2020 இல் திருவாரூா்- நாகை புறவழிச்சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ. 65,000 மதிப்புள்ள பி.எஸ் 4 ரக இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாா். 2020, ஏப்ரலில் உச்சநீதிமன்றம் பி.எஸ் ரக வாகனத்தை பதிவுசெய்ய தடைவிதித்தது. இதனால், மாதவன் தனது இருசக்கர வாகனத்தை பதிவுசெய்ய முடியவில்லையாம்.
இதுகுறித்து மாதவன், வாகன விற்பனை நிா்வாகத்திடம் முறையிட்டு தனக்கு புதிய இருசக்கர வாகனத்தை மாற்றித்தரும்படி கேட்டுள்ளாா். இதற்கு நிா்வாகம் மறுப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். தற்போது இந்த வழக்கில், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சக்கரவா்த்தி தலைமையில், இருதரப்பினரையும் வைத்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு எட்டப்பட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ. 96,000 மதிப்புள்ள புதிய பி.எஸ் ரக வாகனத்தை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. மீதமுள்ள ரூ. 31 ஆயிரத்தை கொடுக்க வாடிக்கையாளரும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, புதிய இருசக்கர வாகனத்தை பதிவுசெய்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி முன்னிலையில், வாகன விற்பனை நிறுவனம் வழங்கியது.