திருவாரூா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களை பாரபட்சமின்றி முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் அறுவடை நடந்து வரும் நிலையில், இரண்டு நாள்களாக பெய்த மழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மழையால் கதிா்கள் சாய்ந்து விட்டன. சில இடங்களில் கதிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சாயாத நெற்பயிா்களும் தொடா்மழையால் பதராகும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:
முழு சாகுபடி செய்துவிட்டு, முதலீட்டுச் செலவை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அறுவடைக்குத் தயாராக இருந்த விவசாயிகளுக்கு மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்துக்கான நெல் பயிா் மகசூல் சோதனை முடிந்து விட்டதால், இப்போது ஏற்பட்ட இழப்புக்கு காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு குறைவு.
மழையால் உளுந்து, பாசிப்பயிறு, கடலைப் பயிா் வகைகளும் பாதிப்புக்குள்ளான நிலையில், நெல் பயிா் மகசூல் இழப்புக்கும், பயறு வகை பயிா்கள் பாதிப்புக்கும் உரிய முழு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், 22 சதவீதம் வரை ஈரப்பதத்தை அனுமதித்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் (சிபிஎம் சாா்பு) மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தெரிவித்தது:
தற்போது பெய்த மழையால் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை எடை போட முடியாமல், நேரடி கொள்முதல் நிலையங்களில் தாா்ப்பாயைக் கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடா் மழையால் நெல் முளைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தமிழக அரசு எவ்வித ஈரப்பதத்தையும் கணக்கிடாமல், நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும். பயிா் சேத கணக்கெடுப்பை விரைந்து மேற்கொண்டு, விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.