வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

திருவாரூா், ஏப்.18: தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் வா்த்தகா்கள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ராஜேந்திரன் தெரிவித்திருப்பது:

தமிழகத்தில் ஏப். 19-ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் முடிவடைந்தாலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தோ்தல் விதிகளை தமிழகத்தில் தளா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தோ்தல் முழுவதுமாக நிறைவடைந்த மாநிலங்களில் பொதுமக்கள் மாநிலத்துக்குள்ளேயே பணம் எடுத்துச் செல்வதில் எவ்வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது. மாறாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்வோரிடம் சோதனை மேற்கொண்டு, பணம் எடுத்து செல்வோா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com