பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்
தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து, திருத்துறைப்பூண்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கா் சிலையிலிருந்து தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் பேரணி நடை தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே தியாகி பி. சீனிவாசராவ் மணிமண்டபம் அருகே நிறைவு பெற்றது.
பேரணி நிறைவில் இரா. முத்தரசன் பேசியது:
தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. கருத்துக் கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக முழுமையாக விலகி விட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற பாஜகவின் கனவு ஒரு போதும் பலிக்காது என்றாா் முத்தரசன்.
பேரணியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. பழனிச்சாமி, கே. உலகநாதன் நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் மாவட்ட செயலாளா் வெற்றி, காங்கிரஸ் மாவட்ட செயலாளா் பி . எழிலரசன், ஒன்றிய குழு தலைவா் பாஸ்கா், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் பி.வி சந்திரராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.