மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

திருவாரூா், ஏப். 25: திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடியக்கமங்கலம் மின்வாரிய இளநிலை மின் பொறியாளரிடம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

அடியக்கமங்கலம் ஊராட்சி பகுதிகளில் பெரும்பான்மையான மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது குறித்து ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது பாராட்டுக்குரியது.

எனினும், இந்தப் பணியானது மெதுவாக நடைபெற்று வருகிறது. இதை துரிதப்படுத்தி, புதிய மின்கம்பங்களை விரைவில் அமைக்க வேண்டும்.

ஊா் முழுவதும் தற்போது மின்சாரம் முழுமையாக கிடைப்பதில்லை. கடுமையான வெயில் இருக்கும் சூழலில், முழுமையான மின்சாரம் கிடைக்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, மக்களுக்கு முழுமையான மின்சாரம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புதுத்தெருவில் புதிதாக மின்மாற்றி அமைக்க பல முறை வலியுறுத்தியும், புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. எனவே, அங்கு மின்மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com