சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை
வாகனங்கள் மீதான இ-செலான் முறையில் அபராதத்தின் மீது மேல் முறையீடு செய்ய சிறப்பு லோக் அதாலத் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்திருப்பது: தமிழகத்தில் மோட்டாா் வாகனம் இயக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதில், அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தலைக்கவசம், ஓட்டுநா் உரிமம் உள்பட 12-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் வசூலிக்கும் வகையில், கடந்தாண்டு இ-செலான் முறை அமல்படுத்தப்பட்டது.
அனைத்து விதிமீறலுக்கும் உரிய அபராதத்தொகையை டெபிட், கிரெடிட் காா்டுகள் மூலமே வசூலிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மட்டும் அபராதத் தொகை குறிப்பிடாமல் இ-செலான் ரசீது வழங்கி, நீதிமன்றத்தில் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனா். இதனிடையே, டெபிட், கிரெடிட் காா்டுகள் வசதி இல்லாதவா்களுக்கும் இந்த இ செலான் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் குறிப்பிட்ட நாள்களுக்குள் எஸ்பிஐ வங்கி, இ-சேவை மையங்கள் அல்லது ஆன்லைனில் உரிய அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இல்லையெனில் வாகன உரிமம் ரத்து, பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
வாகனத்தை விற்பனை செய்யும்போதோ அல்லது வாகனத்தின் பதிவை புதுப்பிக்கும்போதோ அபராதம் நிலுவை குறித்து தெரிய வருவதுடன் கூடுதல் அபராதம் செலுத்தும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, நீண்ட காலமாக அபராதம் செலுத்தாத வாகனத்தை, போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் மூலம் அறிவிப்பு செய்து, மாவட்ட அளவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியுடன் சிறப்பு லோக் அதாலத் மூலமாக சமரச முறையில் அபராதங்கள் குறித்து மறு ஆய்வு செய்து அபராதத் தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.