தில்லியிலுள்ள அரசு மருத்துவமனைகளின் தயார் நிலை தொடர்பாக, சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரும் 16-ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இதுதொடர்பாக தில்லி அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
தில்லி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு, முதல்வர் கேஜரிவால் முடிவு செய்துள்ளார். இதற்காக, அந்த மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் வரும் 16-ஆம் தேதி அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.
தங்களது மருத்துவமனைகளில் கையிருப்பில் உள்ள மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும் உபகரணங்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகளுடன் கூட்டத்தில் பங்கேற்கும்படி, கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி. உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சுமார் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் இந்த உயிரிழப்புகள் நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், தில்லியிலுள்ள அரசு மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்து கேஜரிவால் ஆலோசனை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.