ஆப்பிரிக்க மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் வகையில் இணையதளத்தில் விண்ணப்பம் அளிப்பதற்கான தேதியை நீட்டிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தில்லி பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இது குறித்து தில்லி பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
தில்லி பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மின்னஞ்சல், தொலைபேசி வழியாக கோரப்படும் விசாரணைகளுக்கு உரிய பதில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டினருக்கான இணையதள பதிவுக்கான இறுதித் தேதியும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆப்பிரிக்க நாட்டு மாணவர்களிடம் இருந்து 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தில்லி பல்கலையின் வெளிநாட்டு மாணவர் பதிவேடு அலுலவகம் பெற்றுள்ளது, இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கான இணையதள பதிவுக்கான இறுதித் தேதி ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்து மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க மாணவர்களின் விசாரணைகளை கையாளுவதற்காக வெளிநாட்டு மாணவர் பதிவேடு அலுவலகப் பிரிவு ஊழியர்கள் பிரத்யேகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, இப்பிரிவுக்கு பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் இருந்து ஆர்வமிக்க விசாரணைகள் வருகின்றனர்.
தில்லிப் பல்கலையில் படிக்கும் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கச் செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றனர் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.