பாவூர்சத்திரம், நவ. 19: கீழப்பாவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கீழவெள்ளகால் ஊராட்சிக்குள்பட்ட
பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதால் இங்கு வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கீழப்பாவூர் ஒன்றியம், கீழவெள்ளகால் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 17 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகள் அனைத்திலும் மேற்பகுதியில் உள்ள கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. மேலும் சுற்றுச்சுவர்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன.
உள்புறமாக உள்ள மேற்புற தளங்கள் உதிர்ந்து கீழே விழுவதால் இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிகின்றன. வெளிப்புறங்களில் உள்ள ஜன்னல் சிலாப்புகள் அனைத்தும் கீழே விழுந்துவிட்டன. மேலும், மழைநேரங்களில் வீடுகளுக்குள் தண்ணீர்
வருகிறது. இதில் பலரின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளைச் சீரமைத்துத் தரவேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு மூக்கன் என்பவருக்கு சொந்தமான வீடு திடீரென இடிந்து விழுந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து கீழப்பாவூர் ஒன்றிய 4-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார் (தே.மு.தி.க.) கூறியதாவது:
பாதிக்கப்பட்ட வீடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பழுது பார்க்க வேண்டும். இல்லையெனில், இப் பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.