களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வனத்துறை சாா்பில் வரையாடு கணக்கெடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அழிந்துவரும் நிலையில் உள்ள மாநில விலங்கான வரையாடு இனத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் வரையாடு கணக்கெடுப்புப் பணி இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்காக வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வள்ளியூா், வழுக்கம்பாறை, கிளாமலை, வடகரை, செங்கல்தேரி ஆகிய 5 பீட்களில் உள்ள 9 இடங்களில் வரையாடு கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வனத் துறையினருக்கு களக்காடு தலையணையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் ராமேஸ்வரன் தலைமை வகித்து பயிற்சியளித்தாா்.
வனச் சரகா்கள் பிரபாகரன் (களக்காடு), வேலுச்சாமி (மேலகோதையாறு), வரையாடு திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளா் ரவிக்குமாா், உயிரியலாளா் ஏக்னஸ் உள்ளிட்ட வனத் துறையினா் பங்கேற்றனா்.