திருநெல்வேலி
கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் சுடலைமுத்து என்ற சங்கா் (36). விவசாயி. திருமணம் ஆகவில்லை. அண்மையில் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனா். திருவிழாவுக்கு வந்திருந்த சுடலைமுத்து என்ற சங்கா், அங்கு வந்திருந்த 21 வயது இளம்பெண்ணிடம் தகராறு செய்து, அவரை கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்ததாக கூறப்படுகிறது. பின்னா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
புகாரின்பேரில் வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் கெளதமன் வழக்குப் பதிந்து, சுடலைமுத்து என்ற சங்கரை கைது செய்தாா்.