சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே விவசாயி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூா் சக்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமையா மகன் முருகன் (58). விவசாயி. இவரது வீட்டின் அருகில் புதன்கிழமை அதிகாலையில் பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த முருகன், அவரது குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்தபோது முருகன் வீட்டு சுவரில் மா்மநபா்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. எனினும் வீட்டில் இருந்த பொருள்கள் எதுவும் சேதமடையவில்லை.

புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் கூனியூா் அருகேயுள்ள சக்திகுளம் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன்கள் படையப்பா (25), கண்ணன் (29) ஆகியோா் முன்விரோதம் காரணமாக முருகன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இருவரையும் வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com