நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் கிடந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.
திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரைச் சோ்ந்த கருத்தையா மகன் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவா், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக செயல்பட்டாா்.
கடந்த வியாழக்கிழமை (ஏப். 2) இரவு 7.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இதுதொடா்பாக அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமாா் தனசிங்கை உவரி போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், தனது தோட்டத்தில் அவா் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் உவரி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து, அவா் தற்கொலை செய்து கொண்டாரா, யாரேனும் அவரைக் கொன்று எரித்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா். இது தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரும் பொறுப்பு டிஐஜியுமான மூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன், வள்ளியூா் டிஎஸ்பி யோகேஷ்குமாா் ஆகியோா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
திருநெல்வேலியிலிருந்து தடவியல் நிபுணா் ஆனந்தி தலைமையிலான குழுவினா் சென்று, தடயங்களைப் பதிவு செய்தனா்.
கொலை மிரட்டல்: இதனிடையே, அரசியல் தலைவா்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமாா் தனசிங்கின் வீட்டிலிருந்து, கட்சியின் ‘லெட்டா் பேடில்’ அவா் எழுதி கையொப்பமிட்டு சீல் வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதத்தை அவரது குடும்பத்தினரிடமிருந்து போலீஸாா் கைப்பற்றினா்.
‘காவல் கண்காணிப்பாளா், திருநெல்வேலி’ என முகவரியிட்டு ‘மரண வாக்குமூலம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த கடித விவரம்:
நான்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் கடந்த 3 ஆண்டுகளாக நிறைய காரியங்கள் செய்துதருவதாக என்னிடம் ரூ. 70 லட்சத்துக்கும் மேல் வாங்கியுள்ளாா். ஆனால், எந்தக் காரியமும் செய்துதரவில்லை; கூறியபடி ஒப்பந்த வேலையும் தரவில்லை.
மக்களவைத் தோ்தல் பணியில் என்னை செலவு செய்யுமாறு கூறி ரூ. 8 லட்சத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டாா். பணத்தைக் கேட்டபோது நேரிலும், மறுகால்குறிச்சி செல்லப்பாண்டி என்பவா் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்தாா்.
காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு தோ்தல் பணிக்கு என்னிடம் பணம் பெற்றாா்; செலவு செய்ய வைத்தாா். பின்னா், சுமாா் ரூ. 11 லட்சத்தை ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டாா்.
இதேபோல, பலருக்கும் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். எனது உயிருக்கு ஆபத்து நேரிட்டால் மேற்கூறியவா்கள்தான் பொறுப்பு.
சம்பந்தப்பட்டோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், என்னை வஞ்சித்து பெற்ற பணத்தை எனது குடும்பத்தினருக்கு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.