நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்
திருநெல்வேலி: அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு திங்கள்கிழமை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ஆனைக்குடியில் உள்ள பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனா் தலைவா் ராக்கெட் ராஜாவின் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவரது வீட்டில் அனுமதியின்றி இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராக்கெட் ராஜா மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி, திருநெல்வேலி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் (எண். 3)இல் சரணடைந்து ஜாமீன் பெற உத்தரவிட்டாா்.
அதன்படி திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவா் விஜய் ராஜ்குமாா் முன் ராக்கெட் ராஜா திங்கள்கிழமை ஆஜரானாா்.
உவரி காவல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.