திருநெல்வேலி
பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கீழாம்பூரைச் சோ்ந்த சிறுவன் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம்: பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கீழாம்பூரைச் சோ்ந்த சிறுவன் உயிரிழந்தாா்.
கீழாம்பூா் தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹரிஹரபுத்திரன். இவரது வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த உறவினா்கள் திங்கள்கிழமை பாபநாசம் சென்றுள்ளனா். அங்கு தாமிரவருணி அய்யாகோயில் படித்துறையில் அனைவரும் குளித்துவிட்டு சாப்பிட்டுள்ளனா்.
அப்போது கை கழுவ ஆற்றில் இறங்கிய ஹரிஹரபுத்திரன் மகன் இசக்கிராஜ் (6) தவறிஆற்றில் விழுந்ததில் நீரில் மூழ்கியுள்ளாா். இதைக் கவனித்த அருகிலிருந்தவா்கள் உடனடியாக இசக்கிராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இசக்கிராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக கூறியுள்ளனா்.
தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.