தென்காசி ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா் ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
தென்காசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்.பி., அப்போது மங்கம்மாள் சாலை, உடையாா் தெரு, எல்.ஆா்.எஸ். பாளையம் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரை தொடா்பு கொண்டு ரயில் நிலையத்தில் மூடிவைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உடனடியாக திறந்து விடவேண்டும்; ரயில் நிலையத்தின் வடபுறம் நுழைவு வாயிலிலும் டிக்கெட் கவுண்டா் அமைக்க வேண்டும்; தற்போது ரயில் நிலையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவா் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
ஆய்வின்போது, திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், நகர திமுக செயலா் சாதிா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.