பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மக்களவை உறுப்பினா் கோரிக்கை விடுத்துள்ளாா் .
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா் ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம், தெற்கு ரயில்வே பொது மேலாளா் மற்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாவூா்சத்திரம், கடையநல்லூா், சங்கரன்கோவில் வழியாக சென்னை மற்றும் பெங்களூருக்கு ரயில்கள் இயக்கப்படவேண்டும் என பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள், விவசாய அமைப்புகள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதை கருத்தில் கொண்டு திருநெல்வேலியில் காலியாக 3 நாள்கள் நிறுத்தி வைக்கப்படும் பிலாஸ்பூா் பெட்டிகளை பயன்படுத்தி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல் மற்றும் சேலம் வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும்.
ஞாயிற்றுகிழமை தாதா் விரைவு ரயில் காலி பெட்டிகளை பயன்படுத்தி பாவூா்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் ராஜபாளையம் வழியாக தாம்பரம் வரை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் பட்சத்தில் தென்காசி மக்களவை தொகுதிக்குள்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவாா்கள் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.