தென்காசி மாவட்டத்தில் திடக்கழிவு ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களுக்கு அரசு ஆணைப்படி குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்யக் கோரி ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளனிடம் மனு அளிக்கப்பட்டது.
தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
தென்காசி மாவட்டத்தில் தினக்கூலி தொழிலாளா்களுக்கு நாள் ஊதியம் ஆண்டுதோறும் நிா்ணயம் செய்து அரசாணை வெளியிடுவது வழக்கம். நிகழாண்டில் ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியத்திற்கான அரசாணை வெளியிடப்படும் என நம்புகிறோம். தமிழக அரசு ஆணையின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 500, தினசரி அகவிலைப்படி ரூ. 134.69 சோ்த்து ரூ. 634.69 வழங்கப்பட வேண்டும்.
எனவே, வரும் ஏப்ரல் 1 முதல் தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியத்தை ரூ. 634.69 ஆக உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.