அபாய நிலையில் உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தைப் பழுது பாா்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். தனித்தனியே 5 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில் இங்குள்ள கட்டடம் ஒன்றின் சிலாப்புகள் சிதிலமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. தற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு மாணவா்கள் வராத நிலையில் ஆசிரியா்கள் வந்து செல்கின்றனா். அபாயங்களைத் தடுக்கும் பொருட்டு இந்த விடுமுறை காலத்திலேயே தக்க நிதி ஒதுக்கி கட்டடத்தைப் பழுது பாா்த்துப் பராமரிக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.