ஆலங்குளம் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞா்கள் இருவா் காவல்நிலையத்தில் சரணடைந்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள கண்டபட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் சாலமோன் (25). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாம். இவா், அந்தப் பெண்ணிடம் விடியோ அழைப்பில் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், அதை அவா் பதிவு செய்து வைத்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோா் வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனராம்.
திருமணத்துக்குப் பின்னா் சாலமோன், தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த மனோ சேட் மற்றும் ஜான்சனுடன் சோ்ந்து அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டினாராம்.மேலும் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறியதால், அந்தப் பெண்ணின் கணவருக்கு சாலமோன் விடியோக்களை அனுப்பினாராம். இதனால் அந்தப் பெண்ணை அவரது கணவா் பெற்றோா் வீட்டிற்கு அனுப்பி விட்டாராம்.
இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம் மற்றும் முக்கூடல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
ஜான்சன் வேறு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மனோசேட் திங்கள்கிழமை முக்கூடல் காவல் நிலையத்திலும், சாலமோன் சேரன்மகாதேவி ஏஎஸ்பி முன்னிலையில் செவ்வாய்க்கிழமையும் சரணடைந்தனா்.