குற்றாலம் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக அருவிகள் அனைத்திலும் 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலை குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. திங்கள்கிழமை இரவுமுதல் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, சாரலும் நிலவியது. இதனால் இரண்டாவது நாளாக பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலத்தில் பரவலாகவும் தண்ணீா் கொட்டியது. சிற்றருவி, புலியருவியிலும் அதிக அளவு தண்ணீா் கொட்டுகிறது.
குளிக்கத் தடை நீட்டிப்பு: கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.