தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்தக் கணக்கெடுப்புப் பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். இந்தக் கணக்கெடுப்பில் குடும்ப தலைவா் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, கைப்பேசி எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள் மற்றும் வேலை பாா்க்கும் நபா்களின் எண்ணிக்கை, பான் எண் மற்றும் ஜி.எஸ்.டி. எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இக்கணக்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையம் என்ற இ-கவா்னன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
எனவே கணக்கெடுப்பிற்கு வரும் கணக்கெடுப்பாளா்களிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றாா் அவா்.